Sunday, September 18, 2016

அட...தூக்கம் இவ்வளவு அவசியமா..!

மகிழ்ச்சியான ஒரு மனநிலையில், சாலையில் நடந்து செல்லும் பெயர் அறியா மனிதர்கள் மீதும் பிரியம் ததும்புகிறது. திடிரென நம் வண்டியின் குறுக்கே யாரேனும் ஓடிவந்தாலும் “இது சகஜம்தானே” எனப் புன்முறுவலுடன் கடந்து செல்ல முடிகிறது.நண்பர்களின் அழகு ரசனையை ரசிக்கவும், உணவின் சுவையை ருசிக்கவும் முடிகிறது.அன்றைய தினம் மகிழ்ச்சியால் நிரம்புவதற்கான தொடக்கப்புள்ளியாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது நம்மை அடுத்தடுத்த நல்விளைவுகளை நோக்கித் தள்ளிச் செல்கிறது. இப்படி நம் மனதையும் உடலையும் நல்லனவற்றை நோக்கி செலுத்துவது ஏதோ ஒரு மாயசக்தி அல்ல; அது ஒரு பயிற்சி

தீப்பெட்டியில் தூக்குச்சியை உரசிப் பற்றவைப்பதற்கே நேர்த்தியான பயிற்சி தேவைப்படுமெனில், மனதில் மகிழ்ச்சியைப் பற்ற வைக்கவும் பயிற்சி தேவைதானே!

நம் உடலையும் மனதையும் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள அடிப்படையான சில வாழ்முறை மாற்றங்கள் அவசியம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் பார்க்கும் எல்லோமும் ஆரோக்கியமாக தெரியும். எப்போதும் வேலை,டென்ஷன், பரப்பரப்பு என அலைந்துக்கொண்டே இருந்தால்,அந்த அலுப்பும் சலிப்புமே நம் இயல்பிலும் பிரதிபலிக்கும். ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்று.அந்த இயல்பை மீட்டெடுப்பது அத்தனை சிரமம் அல்ல. சற்றே மெனக்கெட்டால் சாத்தியமே!

உணவு ,தூக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம்..இந்த நான்கையும் திறம்பட நிர்வகிப்பதுதான் “லைஃப்ஸ்டைல் மேனேஜ்மெண்ட்” என்கிற வாழ்க்கைமுறை திட்டமிடல். தினமும் நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் இதை முறையாகச் செய்தாலே ஆரோக்கியம் மிளிரும்.

முன்பெல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் உழைப்பு என்பது பிரதானமாக இருந்தது. ஆனால், இப்போது அனைத்து வேலைகளையும் இயந்திரமயமாக்கி,எல்லாமே ஒரு “டச்”சில் வந்து நிற்கின்றன. ஆனால் மனித உடலோ இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உழைத்து உழைத்து உழைப்புக்குப் பழக்கப்பட்டிருக்கிறது.உழைத்துக்கொண்டே இருந்தால், அதன் இயங்குதன்மை சீரான ஒழுங்குடன் இருக்கிறது. அதுவே உடலுக்கு வேலையே கொடுக்காமல் இருந்தால், அதில் சிக்கல் உண்டாகிறது. கொழுப்பு, தசை, எலும்பு எல்லாமே சேர்ந்ததுதான் மனித உடல்.வெளியேற்றுவதற்கான வேலையே கொடுக்காத போது உடம்பில் கொழுப்பு சேர்ந்துக்கொண்டே இருக்கிறது. இயக்கமே இல்லாமல் தசைகள் தளர்ச்சி அடைகின்றன. வெயிலில் கூட செல்லாமல் ஏசியிலும், அலுவலகத்தின் உள்ளேயும் அமர்ந்திருப்பதால் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது.

இளம் பருவத்தில் ஆரோக்கியமான ஓர் இளைஞனுக்கு, உடலில் 20 சதவிகிதம் கொழுப்பு இருக்க வேண்டும். அதுவே ஒரு பெண்ணுக்கு, அது 25-30 சதவிகிதமாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது ஆண் உடலில் 40 சதவிகிதம் கொழுப்பும், பெண் உடலில் 50 சதவிகிதம் கொழுப்பும் இருக்கிறது. மனித உடலுக்கு கொழுப்பு அத்தியாவசியம்தான். ஆனாலும், அதன் பணி மிகவும் வரம்புக்கு உட்பட்டது. அது,குளிரில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். உடலின் வைட்டமின்களை பாதுகாக்கும்.முக்கியமாக உடம்பில் ஏதேனும் நச்சுப்பொருட்கள் இருந்தால், அது வேறு உறுப்புகளை பாதிக்காதவாறு, கொழுப்பு தன்னுடன் சேர்த்துக்கொள்ளும். ஆக, உடம்பில் ஏராளமான கொழுப்பு இருந்தால், அது அந்தளவுக்கு நச்சுப்பொருட்களை உடலுக்குள் அடைத்து வைத்திருக்கிறது எனப் பொருள்.

நவீன நகர வாழ்வில் மண், நீர், காற்று..என சுற்றுப்புறம் முழுவதையும் நச்சாக்கி வைத்திருக்கிறோம். பாக்கெட் உணவுகள், வினோத சுவையூட்டிகள், பிராய்லர் சிக்கன்,அழகுச் சாதன பொருட்கள்..என உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் வேதிப் பொருட்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். இவைதான் நச்சாக மாறி, உடலின் கொழுப்புடன் சேர்ந்துக் கொள்கின்றன. பிறகு அவை ஒவ்வொரு நோயாக உருவாக்கி நம் வாழ்க்கையை நரகம் ஆக்குக்கின்றன. பதற வேண்டாம்..! வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் சிலவற்றை செய்வதன் மூலம் இந்த சூழலை எளிதாக கடந்து வர முடியும்!

தூக்கத்தில் தொடங்குவோம்

பகலில் நாம் எப்படி உணர்கிறோம் என்பது இரவில் நம் தூக்கம் எப்படி இருந்தது என்பதை பொறுத்துதான் அமையும். போலவே, தூக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வும் பகலில் நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. நிம்மதியான தூக்கம் மூளையை மிரட்டி ஓய்வெடுக்க சொல்லும். இதனால் மன அழுத்தம் தீரும். தூங்கும் நேரம், தூங்கும் முறைகள் ஆகியவை தூக்கத்தை அதிகம் பாதிக்கும். ஒவ்வொருவருக்கும், அவர் உடல் மற்றும் செய்யும் வேலையின் தன்மை பொறுத்து தேவையான தூங்கும் நேரம் மாறுபடும்.எந்த முறை உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதை நீங்கள்தான் அனுபவத்தின் மூலம் கண்டறிய வேண்டும். உங்கள் தூக்கத்தை செறிவூட்டி, பகல் நேரத்தில் நிம்மதியாக இருக்க வழிவகுக்க சில டிப்ஸ் இதோ:

முறையான தூங்கும் நேரம்:

எதிலுமே ஒரு ஒழுங்கு இருந்தால் அதன் விளைவுகள் சாதகமாக இருக்குமென்பது அடிப்படை. அது போல தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, உடலுக்கு பல வகையில் நல்லது. வார இறுதிகளில் இதை பின்பற்றுவது கடினம் என்பவர்கள் அதற்கேற்றது போல நேரத்தை சற்று மாற்றி அமைக்கலாம்.. இரவில் ஏதேனும் வேலை வந்து தூங்குவதற்கு தாமதமானால் பகலில் தூங்கி அதை சமன் செய்யலாம்.எழுந்திருக்கும் நேரத்தை மாற்றாமலிருக்கவும், அதே சமயம் போதுமான நேரம் தூங்கவும் இது உதவும். ஆனால் மற்ற நாட்களிலும் பகலில் தூங்குவது, இரவு தூக்கத்தை பாதிக்கும் என்பதை மறக்க கூடாது. சில சமயம் இரவு உணவுக்கு பின் உடனே தூக்கம் வரலாம். அப்போது எதாவது உடற்பயிற்சிகள் செய்து, நண்பர்களுக்கு ஃபோன் செய்து, தூக்கத்தை விரட்டவும். சீக்கிரம் தூங்கிவிட்டால் நள்ளிரவில் முழிப்பு வந்து மொத்த சிஸ்டமும் குலைந்து போகும்.

மெலட்டனின் ஹார்மோன்:

இயற்கை ஒளியால் உற்பத்தியாகும் இந்த ஹார்மோன் தான் நம் தூக்கத்தை முடிவு செய்கிறது. சூரியனை பார்க்காமல் அலுவலகத்திலே வேலை செய்பவர்களுக்கு பகலிலே தூக்கம் அதிகமாக வரக்காரணம் மெலட்டனின் தான்.. போலவே, இரவு நேரத்தில் டிவி, கம்ப்யூட்டர் என தேவைக்கு அதிகமான வெளிச்சத்தால் தூக்கம் போவதற்கும் இந்த ஹார்மோனே காரணம். வேலை இடத்தில் வெளிச்சம் அதிகம் வருமாறு அமைப்பது, வேலை இடைவெளியில் சூரிய ஒளியில் நடப்பது போன்றவை பகலில் நம்மை உற்சாகமாக வைக்கும்.

இரவு தூங்குவதற்கு முன் டிவி பார்ப்பது தூக்கத்தை கெடுக்கும். ஐபேட், கிண்டில் போன்ற கருவிகளை இரவில் தவிர்க்கலாம். அறையில் இருக்கும் விளக்குகள் பிரகாசமான ஒளியமைப்பு கொண்டதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியில் இருந்து விழும் நிழல்கள் தெரியாதவண்ணம் திரைச்சீலைகள் அமைத்துக்கொள்ளுங்கள். இரவு தண்ணீர் குடிக்க, பாத்ரூம் செல்ல எழுந்தாலும் உடனே விளக்குகளை போடாமல் ஃப்ளாஷ் லைட் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மீண்டும் விரைவில் உறங்க செல்வதற்கு இது உதவும்.

படுக்கையறை:

படுக்கயறையை அழகாக டெகரெட் செய்வதை விட தூங்குவதற்கு ஏற்ற இடமாக வைத்து கொள்வதுதான் முக்கியம்., அண்டை வீட்டில் இருந்து வரும் சத்தம் போன்ற இரவு நேர சத்தங்கள் அறைக்குள் கேட்காத வண்ணம் கதவுகளை அமைத்துக் கொள்ளுங்கள். மெல்லிய ஒலியில் இசை ஒலிப்பது இந்த சத்தங்களில் இருந்து நம்மை காப்பாற்றும். அதிக சத்தமெனில் இயர் ப்ளக் பயன்படுத்துங்கள். ஒலியை போலவே அறையின் வெப்பநிலையும் மிக முக்கியமானது. அடிக்கடி ஏசியை அணைத்து பின் மீண்டும் போடுவது என்றில்லாமல் சீரான வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மெத்தை மற்றும் தலையணை விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்யவே கூடாது. உங்களுக்கு ஏற்றவாறு பார்த்து வாங்குங்கள். ஏதேனும் பிரச்சினை எனில் மாற்றுவதற்கு தயங்காதீர்கள். பெரும்பாலானவர்களின் நிம்மதியற்ற தூக்கத்திற்கு இவைதான் காரணமென மருத்துவர்கள் சொல்கிறார்கள். படுக்கையை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். அங்கேயே அமர்ந்து வேலை செய்வதை தவிருங்கள். மெத்தைக்கு வந்த உடனே தூங்க வேண்டும் என உடல் தானாக தயாராகி விடும்.

இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இன்னும் சில காரணிகளும் நம் தூக்கத்தை மேம்படுத்த உதவும். அளவான இரவு உணவு, காஃபியை தவிர்ப்பது, புகையை தவிர்ப்பது.. இவையெல்லாம் நம் தூக்கத்தை நேரிடையாக பாதிக்கும் விஷயங்கள்.இரவில் அதிக திரவ உணவு எடுத்துக்கொள்வதும் தூக்கத்தை நள்ளிரவில் பாதிக்கும்.தூக்கம் வரவில்லையெனில் மூச்சை நன்றாக இழுத்து பின் விடவும். இது நம் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக உதவும்.

நல்லா தூங்குங்க பாஸ்.

Thursday, September 15, 2016

ஒரு வரியில் இயற்கை மருத்துவம்

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம் ;

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02.முதுகுத் தண்டு வலிக்கு பாப்பாளிப் பழம் சாப்பிடுங்கள்!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

05. காது மந்தம் போக்கும் தூதுவளை!

06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!

07. பித்த மயக்கம் தீர புளியாரை!

08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!

09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!

10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!

11. கண் பார்வை அதிகரிக்க காரட், புதினா, ஏலக்காய்!

12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் ,எலுமிச்சையும்!

13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!

14. சர்க்கரை நோயை கட்டுப் படுத்தும் வெந்தயம்!

15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!

16. இளைத்த உடல் பெருக்க மிளகு!

17. பொடுகைப் போக்க தயிரில் குளி!

18. மூல்நோய்க்கு கருணைக் கிழங்கு!

19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!

20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!

21. காது வலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!

22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்க!

23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!

24. வாழைத் தண்டு சிறு நீரகக் கற்களை கரைக்கும்!

25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!

26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!

27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!

28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!

29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் ,பாதாம் பருப்பு!

30.மரு தோன்றி வேர்ப் பட்டையை அரைத்துக் கட்ட கால் ஆணி குணமாகும்.!.

Friday, July 24, 2015

குறட்டை விடுவது ஏன்?


நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?
தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது.
அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.
என்ன காரணம்?
சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு. புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.
ஆபத்தானதா?
குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது ‘அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா’ (Obstructive Sleep Apnea) எனப்படும்.
அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.
ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.
இதில் சில ஆபத்துகளும் உள்ளன. இவர்களுக்கு இரவில் தூக்கம் கெட்டுவிடும். காலையில் எழுந்ததும் கடுமையாகத் தலைவலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள், வேலையில் கவனக்குறைவு ஏற்படும், ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத் துடிப்பில் பிரச்சினை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோத்துக்கொள்ளும்.
தடுக்க என்ன செய்யலாம்?
# தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.
# மல்லாக்கப் படுக்க வேண்டாம்.
# ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.
# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
# தைராய்டு பிரச்சினைக்கு மருந்து சாப்பிட வேண்டும்.
# மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
# தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது. 

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்க...ு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.

Thursday, February 20, 2014

வெந்நீர் குடிப்பதால் விளையும் நன்மைகள்


வெந்நீர் குடிப்பதால் விளையும் நன்மைகள்:

எளிதாகக் கிடைக்கும் விஷயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான், 'வெந்நீர்'. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம். அவை இதோ...

 * காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

 * ஏதாவது எண்ணைப் பல காரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.

 * தொடர்ந்து வெந்நீர் குடித்தால், உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.

 * மூக்கு அடைப்பால் அவதிப்படுகிறீர்களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு 'ஆவி பிடித்தால்' மூக்கு அடைப்பு, தலைப் பாரம் அகன்றுவிடும்.

* உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும். மேலும் உடல் வலிக்கும்போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

 * அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலியெடுக்கிறதா? அப்போதும் வெந்நீர் தான் கை கொடுக்கும். பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகி விடும்.

 * வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள், வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று, கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

 * வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே 'ஜில்'லென்று ஐஸ் வாட்டர் பருகுவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.

 * ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது. அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும். இப்படி வெந்நீரின் நன்மைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். வெந்நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது என்றும் நன்மை தரும்.

உடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்


உடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம்.

உடல் எடை குறைக்கும் உணவு பொருட்கள்:
 * வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.

 * ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளை கரைக்கிறது.
 * மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம் உள்ளது எனவே இதை தவிர்ப்பது நல்லது.

 * ஒரு நாளைக்கு 10 டம்பளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

 * எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க வேண்டும், அவ்வாறு தவிர்ப்பதால் நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேலைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.

 * பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டு பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.
 * பாதாம் பருப்பு நாளொன்றுக்கு 7 -10 வரை எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்க உதவுகிறது.

 * கீரைகளில் அதிகப்படியான வைட்டமீன், மினரல்ஸ் மற்றும் பைபர் சத்துக்கள் உள்ளதால் தினம் ஒரு கீரை எடுத்து கொள்ளலாம்.

* கீரின் டி உடல் எடையை குறைக்கும்.
 * பெரும்பாலான மக்கள் பொரித்த உணவு பொருட்களை அதிகம் விரும்புவார்கள் எனவே அதை குறைத்து கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பை தவிர்க்கலாம்.

 * தாணியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
 * காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

 * அரிசி மற்றும் கிழங்கு பொருட்களில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை, ஓட்ஸ், பாஸ்தா, ராகி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

 * சாப்பிட்ட பின் உறங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதி குறைந்து விடும்.

Saturday, December 21, 2013

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள்

 
  • டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.
 
  •  குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.
 
  • கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.
 
  • சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.
 
  •  சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.
 
  •  ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.
 
  • மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.
 
  • தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.
 
  •  ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.
 
  • மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.